Friday, October 15, 2010

Bhava... ! ப4வா...! भवा...

ப4வா - என்ற சௌராஷ்டிர வார்த்தை -
சற்றே ஆழ்ந்து சிந்தித்தால் இந்த வார்த்தையின் அர்த்தம் பல புதிய விளக்கங்களை தரும். 
பொதுவாக சௌராஷ்டிரர்கள் அனைவரும் ஆண்களுக்கான விளிச் சொல்லாக இந்த ' ப4வா ' என்ற வார்த்தையை உபயோகிப்பர்.  மேலும் தங்கள் உடன் பிறந்தவளின் கணவனையும் ' ப4வா' என்று அழைப்பர்.

' ப4வ  ' (Bhavaa ) என்ற  வார்த்தை, ' ஆகியவனே '  என்று பொருள் தரும்.  ' தீ3ர்க்க சுமங்கலி ப4வ' என்றால் நெடுநாள் கணவனுடன் இருக்கும்படி ஆகுக ' என்று பொருள். 

இதை விரிந்த பொருளில் நோக்கும்போது; ' சரவண பவ ' என்ற சடாக்ஷர மந்திரத்தில் உள்ள - பவ - என்ற சொல் எப்படி பொருள் தருகிறது?

" சரவண - என்று ஆகியவனே ! 

அதாவது, சரவண என்ற பொய்கையில் உருவாக ஆகியவனே  - என்று !
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த பரம் பொருள் ' ப4வம் ' என்கிற இந்த உலகாயும் ஆகியவன் ! மேலும் அந்த ' பவம் ' என்று குறிப்பிடப்படும் இவ் உலகில்
 ' சரவண '  என்ற உருவாய்; சரவண என்ற பெயரில்  பிறந்தவனே ! என்று பொருள் தருகிறது சடாக்ஷர மந்திரம். 

ஆக ' ப4வ ' என்று ஒருவனை பார்த்து நாம் விளித்தால், அது இந்த உலகில் உரு ஆகியவனே - உரு எடுத்து வந்தவனே ... என்று பொருள்.

சிவனுக்கும் ' பவன் ' என்று ஒரு பெயர் உண்டு .

இந்த ' பவ ' என்ற சௌராஷ்டிர வார்த்தை, நமது ஆழ்ந்த ஆத்மிக ஞானத்தை குறிப்பிடுகிறது.   ' ப4வண் ' என்ற சௌராஷ்டிர வார்த்தையை நாம் ' பிராமணர்' களை குறிக்கும் சொல்லாக உபயோகப் படுத்தினாலும் , ' பிராமணன்  ' என்ற வார்த்தையின் பொருள் என்ன? ' பிரம்மமாக ஆகியவன் '  !

 பிரம்மம் என்றாலே அதற்க்கு உருவம் கிடையாது.  எனவே சௌராஷ்டிர மொழியில் நாம் உபயோகப் படுத்தும் ' பவ' என்ற வார்த்தை -  ' பிராமண ' என்ற வார்த்தைக்கு நிகர்-அல்ல என்பது மட்டும் அல்ல, அதற்க்கு நேர் எதிரான பொருள் கொண்டதும் கூட !  ஆயினும் நாம் ' பவண்' என்ற வார்த்தயை பிரமணர்களை குறிக்க உபயோகப் படுத்துகிறோம் ! உருவம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எல்லாம் ஒன்று தான் என்கிறீர்களா ? அதுவும் சரிதான் !

5 comments:

குமரன் (Kumaran) said...

என்னைச் சிந்திக்க வைத்துவிட்டீர்கள். எனக்குத் தோன்றுவதைக் கூறுகிறேன்.

ப4வ என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு ஆகுதல் என்ற பொருள் மட்டும் இல்லை; பிறத்தல், இருத்தல், வாழ்க்கை என்று பல பொருட்கள் இருக்கின்றன. சரவணபவன் என்னும் போது சரவணக்காட்டில் பிறந்தவன் என்ற பொருள். சிரஞ்சீவி பவ என்று வாழ்த்தும் போது மரணமற்று இரு என்று பொருள்.

இதில் எந்த பொருளிலும் நம் மொழியில் நாம் மற்றவர்களை அழைக்கும் ப4வா என்ற சொல் வரவில்லை என்பது என் எண்ணம். 'நீங்கள்' என்று மரியாதையாக ஒருவரை அழைக்க/விளிக்க பயன்படும் சமஸ்கிருதச் சொல் 'ப4வான்'. கீதையில் அருச்சுனன் கண்ணனை விளிக்க இந்தச் சொல்லைப் பயன்படுத்துவதைக் காணலாம். அந்த மரியாதை விளியே நம் மொழியில் ப4வா என்று ஆனது என்று எண்ணுகிறேன்.

எல்லோரையும் 'ப4வான்' என்று மரியாதையோடு விளிக்கும் போது பிராமணர்களை விளிக்கச் சிறப்பாக 'பகவன்' என்ற சொல் சமஸ்கிருதத்தில் பயன்படும். புராணங்களில் அரசர்களை பிராமணர்கள் 'ராஜன்' என்று விளிக்க அரசர்கள் பிராமணர்களை 'பகவன்' என்று விளிப்பதை நிறைய இடங்களில் காணலாம். அந்த 'பகவன்' என்ற சொல்லே நம் மொழியில் 'ப4வன்' என்று ஆனது என்பது என் எண்ணம்.

R-Bhaskara Narayanan said...

சில விஷயங்களை குறிப்பாக எனது தாய் மொழியான சௌராஷ்டிரா மொழியை சில வருடங்களாகத்தான் ஆராய்ந்து வருகிறேன். இதில் தாங்கள் கூறுவதும் புறக்கணிக்க இயலாது தான். ஆயினும், பவன் என்ற சிவனை குறிக்கும் பல பெயர்களில் ஒன்றை நாம், ப4வண் என்று சௌராஷ்டிர மொழியில் பிராமனர்களை சுட்ட உபயோகிக்கும் போது நான் கவனித்து என்ன எனில்; ஆண் பிராமணனை சுட்ட ப4வண் என்றும் பெண் பிராமனரை சுட்ட ப4வ்ணி என்றும் விளிக்கிறோம். இதில் ' பவ்ணி' என்ற சொல் ' பவன்' என்ற சிவனின் பத்தினியாக ' பவானி' என்ற சொல்லின் மருவாக இருக்கலாம் / இருந்திருக்கலாம்.

R-Bhaskara Narayanan said...

பவன் என்ற சிவனின் பத்தினியாக பவானி என்று பல இடங்களில் சிவ புராணம் முதலிய நூல்கள் சுட்டுவதை காணலாம்.

குமரன் (Kumaran) said...

உண்மை. சிவனுக்கு ப4வ என்ற பெயரும் பார்வதிக்கு ப4வானி என்ற பெயரும் இருக்கிறது.

achin Sundar said...

Ya! Iso mella research keruvaaiga??