Thursday, August 23, 2018

சௌராஷ்ட்ராவின் ஓலைச் சுவடிகள்

இது இருபத்தோராம் நூற்றாண்டு.  கி பி 2018  ம் வருடம்.  தமிழக சௌராஷ்ட்ரா மக்கள் சுமார் அறுநூறு முதல் எண்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் வந்தனர் என்று கணிக்கப்படுகிறது.  அப்படியானால் கி பி 12 ம் நூற்றாண்டு முதல் சௌராஷ்ட்ரர்களின் புலம் பெயர்வு நிகழ்வு நடைபெற்றது என்று கூறலாம்.   இன்றைய சௌராஷ்ட்ரா நிலப்பகுதி குஜராத் மாநிலத்தின் ஒரு அங்கமாக உள்ளது.  குஜராத்தில் ( சௌராஷ்ட்ரா பகுதி உள்பட ) 12 ம் நூற்றாண்டில் மக்கள் பேசிய மொழி " பழைய குஜராத்தி " என்றும் பழைய குஜராத்தி மொழியின் எழுத்து வடிவம் தேவநாகரி என்றும் அறியப்படுகிறது.  தேவநாகரி எழுத்தில் பழைய குஜராத்தி 12 நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை எழுதப்பட்டு உள்ளதற்கான ஓலை சுவடி ஆதாரங்கள் உள்ளன.
ஸ்ரீ பாலா மன்னரின் தேவி பூஜை - ஓலை சுவடி

மகாவீரரின் பிறப்பு - ஓலைச்சுவடி


உபதேச மாலை  - ஓலைச்சுவடி
இச்சுவடிகள் கி பி 12  நூற்றாண்டு முதல் 16 நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தவை.  பழைய குஜராத்தி மொழியில் எழுதப்பட்டவை.  இவைகளில் தேவநாகரி எழுத்துக்களே பயன்படுத்தப்பட்டு உள்ளன.  தமிழகத்திற்கு புலம் பெயர்ந்த சௌராஷ்ட்ரர்களில் படிப்பறிவு பெற்றவர் இருந்து இருந்தால் இத் தேவநாகரி எழுத்துக்களையே தமது எழுத்துருவாக கொண்டு வந்து இருப்பர்.  ஆயினும் தமிழக புலம் பெயர் சௌராஷ்ட்ரர்கள் தேவநாகரி எழுத்தில் எழுதிய ஓலை சுவடிகள் கிடைத்ததாக தெரியவில்லை .

எப்படியாயினும், பிற்காலத்தில் தமிழகம் ஆந்திர மாநிலத்தோடு ஒன்றிணைந்து இருந்த போது தெலுகு மொழி பள்ளிகளில் கற்பிக்கப்படும் மொழியாக இருந்தது.  தமிழக சௌராஷ்ட்ரர்களும் தெலுகு மொழி பள்ளிகளில் பயின்றனர்.  (  இன்றும் கி பி 1800 -1900 நூற்றாண்டு முன்பகுதி வரை தெலுகு மொழியில், தெலுகு எழுத்தில் எழுதப்பட்ட பல பழைய சொத்து பத்திரங்கள் தமிழகத்தில் காணலாம்.) பின்னர் தமிழகம் தனி மாநிலமாக உருவெடுத்தத்தில் இருந்து தமிழ் எழுத்துக்களை பயின்று பயன்படுத்தி வருகின்றனர்.

Sunday, August 19, 2018

சௌராஷ்ட்ரா ஆட்சியாளர்களின் நாணயங்கள்

சௌராஷ்ட்ரா ஆட்சியாளர்களின் நாணயங்கள் :  சௌராஷ்ட்ரா ஜனபதா என்று அழைக்கப்பட்ட ஐம்பத்தாறு தேசமாக இருந்த காலகட்டத்தில் தங்க வெள்ளி நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன .அந்த நாணயங்கள் " கர்ஷபணா" என்ற பெயரில் மக்களால் அழைக்கப்பட்டது
ஜனபதா காலத்திய நாணயங்கள் தங்கம் மற்றும் வெள்ளி கட்டிகளில் முத்திரை இடப்பட்டது போன்று காட்சியளித்தது.  காலப்போக்கில் நாணயங்கள் சிறப்பான முறையில் வடிவம் பெற்றன. இந்த நாணயங்களில் ஸ்வஸ்திக் , ஸ்ரீ , யானை போன்ற சின்னங்கள் இடம் பெற்றன.
ஜனபதா நாணயங்களில் கோவில் கீழ்தள அமைப்புகளின் வடிவங்களும் இடம் பெற்று இருந்தன.
சௌராஷ்ட்ரா சமஸ்தானங்களில் ஒன்றான பரோடா பல நாணயங்களை வெளியிட்டுள்ளது .
பரோடா சமஸ்தான அரசரான கணபதி ராவ் வெளியிட்ட நாணயம் 
இந்த நாணயன்யங்கள் குஜராத் சௌராஷ்ட்ரா பகுதி  அம்ரேலி மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டவை.

பரோடா சமஸ்தான அரசர் காண்டே ராவ் வெளியிட்ட நாணயங்கள்
பரோடா சமஸ்தான அரசர் மல்ஹர் ராவ் வெளியிட்ட நாணயங்கள்
பரோடா சமஸ்தான அரசர் ஸாயாஜி  ராவ்-3 வெளியிட்ட நாணயங்கள்
பரோடா சமஸ்தான அரசர் ஸாயாஜி  ராவ்-3 வெளியிட்ட நாணயங்கள்
பரோடா சமஸ்தான அரசர் ஸாயாஜி  ராவ்-3 வெளியிட்ட நாணயங்கள்
நவநகர் சமஸ்தான அரசர் விபாஜி வெளியிட்ட நாணயம்
இந்நாணயங்களில் தேவநாகரி எழுத்துக்களே காணப்படுகின்றன. சௌராஷ்ட்ரத்தை ஆக்கிரமித்த  முஸ்லீம் ஆட்சியாளர்களின் நாணயங்களில் மட்டும் அரபி எழுத்துக்கள் காணப்படுகின்றன. ஆகவே வரலாற்று காலம் முதல் ஆங்கிலேயரிடம் சுதந்திரம் பெறும் வரை நாணயங்களில் தேவநாகரி எழுத்துக்களே காணப்படுகின்றன.  இந்த ஆதாரங்களில் இருந்து சௌராஷ்டிர மொழிக்கும் தேவநாகரி எழுத்தே பயன்பட்டிருக்கிறது என்பதை அறியலாம்.

Friday, August 17, 2018

சௌராஷ்ட்ரா கிராமிய நடுகற்கள்





மேலே காண்பவை  சௌராஷ்ட்ரா கிராமிய நடுகற்கள்.  வீரர்கள் மற்றும் சதி என்ற உடன்கட்டை ஏறிய பெண்கள் மற்றும் போர் சாகசம் நிகழ்த்தியவர்கள், மற்றும் சில சிறப்பு நிகழ்வுகளில் நிறுவப்பட்ட நினைவு தூண் சிலைகள் "நடுகற்கள்" எனப்படுகின்றன. இந்த நடுகற்களின்  வேறு பெயர்கள் "பாலியா" அல்லது "கம்பி" (Khambi ) எனப்படுகின்றன.  குஜராத்தில்; குறிப்பாக  சௌராஷ்ட்ரா பகுதியில் இந்த நடுகற்கள் அதிகம் காணப்படுகின்றன.

சௌராஷ்ட்ரா பகுதி தவிர, கட்ச், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நகர்பார்கர் போன்ற இடங்களிலும் இது போன்ற நடுகற்கள் காணப்படுகின்றன.

பாலியா - எனில் "பால" என்ற சொல்லில் இருந்து பிறந்த ஒரு வார்த்தை.  "கம்பி" (Khambi) என்றால் "தூண்" என்று பொருள்படும் வார்த்தை.  இவ் இரண்டு பெயர்களில் நடுகற்கள் சௌராஷ்ட்ராவில் அழைக்கப்படுகின்றன.
லோதால், தார், ஜூனாகாத், தாரங்கதாரா, போன்ற பகுதிகளில் அதிகமாகவும் சூரத் , அஹமதாபாத் (கர்ணாவதி) ஆகிய இடங்களில் சிலவும் காணப்படுகின்றன.
இந்நடுகற்களில், தேவநாகரி எழுத்துக்களில்; "நடுகற்கள்" யாருக்காக நிறுவப்பட்டது, எந்த வீர தீர செயலுக்காக நிறுவப்பட்டது போன்ற விவரங்கள் எழுதப்பட்டுள்ளன.  இந்த நடுகற்கள் காலம் கி பி பதிநோறாம் நூற்றாண்டில் ஆரம்பித்து பதினேழாம் நூற்றாண்டு வரை நீடிக்கிறது.  சௌராஷ்ட்ரர்கள் கர்நாடக மற்றும் தமிழகத்திற்கு புலம் பெயர்ந்த காலம் பதினான்காம் நூற்றாண்டு என்று அனுமானிக்கப்படுகிறது.   எனவே கர்நாடக மற்றும் தமிழகத்திற்கு புலம் பெயர்ந்த சௌராஷ்ட்ரர்கள் தேவநாகரி எழுத்தை பயன்படுத்தி வந்திருப்பார் என்பது கண்கூடு.  சிலர் வேறு எழுத்தை சௌராஷ்ட்ரா மொழியை எழுத பயன்டுத்தினாலும் அவைகள் எல்லாம் வரலாற்று ரீதியாக சௌராஷ்ட்ரர்கள் கலாச்சாரத்தை பிரதிபலிப்பது அல்ல .  இதனால் சௌராஷ்ட்ரர்களின் வரலாறு மறக்கடிக்கப்படுவதும், மறைக்கப்படுவதும் நிச்சயம் .
தாம் வாழும் பிரதேசத்திற்கு ஏற்ப சௌராஷ்ட்ரா மொழியை தெலுகு, தமிழ் போன்ற எழுத்துக்களில் எழுதி வருவதையும் நாம் பார்க்க இயல்கிறது.  இது முற்றிலும் நாம் சௌராஷ்டிரத்துடன் தொடர்பு இழந்து விட்டதை காட்டுகிறது.

ஆயினும் சௌராஷ்ட்ரா மொழி வளர்ச்சி என்பது வரலாற்று ரீதியாக ஆராய்ச்சி செய்து, அவ்வெழுத்தின் வளர்ச்சியுடன் கூடிய அடிச்சுவற்றில் மொழி வளர்ச்சி அமையுமாயின் நமது காலாச்சார வரலாறு பாதுகாக்கப்படும் ... வேறு வழிகளில் தேவநாகரி எழுத்து தவிர்த்த எழுத்துக்களில் மொழி வளர்ச்சி என்று முயற்சிகள் எடுப்பது நமது கலாசார வரலாறு, அழிக்கப்பட்டு நம்மை  வரலாற்றில் அனாதையான இனமாக சித்தரிக்கவே பயன்படும்.